சென்னையில் பேங்க் ஆப் சிலோன் வங்கி சூறை - 2 பெரியார் தி.கவினர் கைது
சென்னை: சென்னையில் உள்ள பாங்க் ஆப் சிலோன் வங்கிக் கிளையை சிலர் உள்ளே புகுந்து அடித்து உடைத்து சூறையாடினர். வங்கி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அதிகாரிகளின் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக பெரியார் திகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைத் தமிழர்களை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நேற்று பெண்ணே நீ பத்திரிகையின் ஊழியர் முத்துக்குமார் சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு காணப்பட்டது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள பாங்க் ஆப் சிலோன் வங்கிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கற்களால் வங்கியைத் தாக்கினர். இதில் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும், வங்கி வளாகத்தில் நின்றிருந்த, வங்கி அதிகாரிகளின் கார்களையும் அடித்து நொறுக்கி விட்டுத் தப்பினர்.
தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
4 போலீஸார் சஸ்பெண்ட்
வங்கி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல் பணியை சிறப்பாக செய்ய தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டு காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளன.
யார், யார் என்று தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியசாமி, போலீஸ்காரர்கள் நாகராஜன், கமலகண்ணன், பாஸ்கரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
2 பெரியார் தி.க. தொண்டர்கள் கைது
இந்த நிலையில், சிலோன் வங்கியைத் தாக்கிய வழக்கில் பெரியார் தி.க.வைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பெரியார் திகவைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கேசவன் மற்றும் வழக்கறிஞர் அமர்நாத் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.