புலிகள் ஊடுறுவல் அபாயம் - கடலோரக் கண்காணிப்பு அதிகரிப்பு
தூத்துக்குடி: இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் ஊடுறுவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், விடுதலை புலிகள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக படகு துறைகள் அமைந்துள்ள இடங்களில் போலீசார் விழிப்புடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையை மீன்பிடிக்க செல்வோரின் எண்ணிக்கை, திரும்ப வருபவர்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுதலை புலிகள் குண்டு காயங்களுடன் வேறு வழியில்லாமல் தமிழகத்திற்குள் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகை கடலோர பகுதிகளுக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதன்பேரில் தமிழக கடலோரங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கூட்டு ரோந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.