மீனவர் வலைகள் கிழிப்பு; மீன்கள் பறிப்பு - இலங்கை கடற்படை அராஜகம்
ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளது. அவர்களது வலைகளை கிழித்தும், மீன்களை பறித்தும் அராஜகம் செய்துள்ளது.
நேற்று முன்தினம் சுமார் 620க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கல் நடுக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தவழியாக இலங்கை கடற்படையினர் 8 ரோந்து படகுகளில் வந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை பார்த்த அவர்கள் 15க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர். படகில் இறங்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி அதில் இருந்த இரால்மீன்கள், ஜி.பி.எஸ்.கருவி ஆகியவற்றை பறித்து கொண்டு, கடலில் வீசப்பட்ட வலைகளை அறுத்தும் கிழித்து எறிந்தும் சேதப்படுத்தினர்.
பின்னர் படகில் இருந்த மீனவர்களை துடுப்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்தனர். அந்த இடத்தை விட்டு உடனடியாக செல்லுமாறு இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை செய்தனர்.
இலங்கை கடற்படை தாக்கியதை தொடர்ந்து உயிருக்கு பயந்த மீனவர்கள் பாதியிலேயே கரைக்கு திரும்பினர். ஆனால் இதுகுறித்து அவர்கள் யாரிடமும் புகார் தெரிவிக்கவில்லை. என்றாலும் மீன்துறை அதிகாரிகள் தமக்கு கிடைத்த தகவல்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதலில் மீனவர்களுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மீனவ சங்க தலைவர் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் மீது உள்ள கோபத்தில் இலங்கை கடற்படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
மத்திய-மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வு காணவேண்டும். மீனவர்கள் மீது அக்கறை கொண்டு செயல்படும் கட்சிக்கே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்றார் அவர்.