'பப்' கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்: அன்புமணி
டெல்லி: 'பப்' கலாசாரம் நமது பாரம்பரியத்துக்கு எதிரானது. இது இந்திய இளைஞர்களை மிகப்பெரும் குடிகாரர்களாக மாற்றிவிடும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் மங்களூரில் பார் ஒன்றில் நடனம் ஆடுக்கொண்டிருந்த இளம்பெண்கள் மீது ஸ்ரீராம் சேனாவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மங்களூர் பிரச்சினையில் பெண்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் இதுபோன்ற 'பப்' கலாசாரத்துக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இது இந்திய இளைஞர்களை மிகப்பெரும் குடிகாரர்களாக மாற்றிவிடும்.
'பப்'புக்கு செல்லும் இளைஞர்களால் தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. இந்தியாவில் நடக்கும் 40 சதவீத விபத்துக்களுக்கு குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதே காரணம்.
இது இந்திய கலாசாரம் கிடையாது. இளைஞர்களிடம் 'பப்' பழக்கம் தொடர்ந்தால் இந்தியாவின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை 60 உயர்ந்துள்ளது வேதனை அளிக்கிறது என்றார் அன்புமணி.