இலங்கை: தீர்வு காண தொடர்ந்து முயற்சிப்போம் - கருணாநிதிக்கு பிரணாப் கடிதம்
சென்னை: இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்று கூறி மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த பிரணாப்பின் கடிதத்தை நிதியமைச்சர் அன்பழகன் நேற்று சட்டசபையில் வாசித்தார்.
கடிதத்தின் விவரம்:
நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில உடல் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொண்டு வரும் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். இது சிறிய அளவிலான பிரச்சினையாக இருக்கவேண்டுமென்றும், நீங்கள் விரைவில் குணம் அடைவீர்கள் என்றும் நம்புகிறேன். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் உங்களது ஆதரவுக்கரம் எங்களுக்குத் தேவை.
கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கடந்த 27-ந் தேதி நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தை பற்றி உங்களுக்கு ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இலங்கையில் போர் நடைபெற்று வரும் பகுதியில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும் வகையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்து இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று (ஜன.29) மாலை அறிவித்துள்ளார்.
போர் மூண்ட பகுதியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்வகையில் தேவையான உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்துள்ளதையும் நான் அறிகிறேன்.
போர்ப்பகுதியில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வழிவகை செய்யும் விதத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கையில் நான் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதை தாங்கள் அறிவீர்கள்.
இது தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்சே, நமது வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்ட அறிக்கைகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
இலங்கையில் விரைவில் அமைதி திரும்புவதற்காகவும், அங்கு நல்ல அரசியல் தீர்வு ஏற்படுவதற்கும் இந்திய அரசு தொடர்ந்து பாடுபடும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்கள் நலனுக்காகவும், அவர்களுடைய நிலை மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அதில் கூறப்பட்டிருந்ததாக அன்பழகன் தெரிவித்தார்.