நவீன் சாவ்லா மீது விரைவில் நடவடிக்கை - பாஜக வலியுறுத்தல்
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் பரிந்துரையை ஏற்று, தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி வரும் ஏப்ரல் 20ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அவருக்கு பின்னர் இப்பொறுப்புக்கு தற்போதைய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாதான் வரவிருக்கிறார்.
இந்நிலையில் கோபால்சாமி நவீன் சாவ்லா பிரிவினைவாதப் போக்குடன் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை விரைவில் தீர்க்க வேண்டும். அதற்கு நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக செய்திதொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், தேர்தல் ஆணையாளர் ஒருவரை நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலைத்துவிடும். அது ஜனநாயகத்துக்கு பெரும் சிக்கலாக அமையும்.
சிபிஐ எதிர்ப்பு
இது குறித்து சிபிஐ தேசிய செயலர் ராஜா கூறுகையில், அடுத்த தலைமை தேர்தல் ஆணையாளராக வரவிருக்கும் நவீன் சாவ்லா நீக்கப்பட வேண்டும் என கோபாலசாமி கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், இப்படி ஒரு பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையர் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன. இதில் உள் நோக்கம் இரு்பபதாக சந்தேகிக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தின் உரிமை, அதிகாரம், செயல்பாடு ஆகியவை குறித்து பாராளுமன்றத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
சட்ட சிக்கல்கள் - காங்.
கோபாலசாமியின் பரி்ந்துரையில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் அவரால் இப்படி ஒரு பரிந்துரையை அனுப்ப முடியுமா, அதற்கான உரிமை அவருக்கு உள்ளதா என்பது சட்ட ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.
தற்போது கோபாலசாமியின் பரிந்துரை மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு இதுகுறித்து உரிய முறையி்ல் பரிசீலித்து முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
நான் ஏன் விலக வேண்டும் - சாவ்லா கேள்வி
இதற்கிடையே, நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று நவீன் சாவ்லா கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது முழுக் கவனமும் பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதில்தான் உள்ளது. மற்றவை குறித்து கவனிக்க, கவலைப்பட எனக்கு நேரமில்லை. தலைமைத் தேர்தல் ஆணையரின் கடிதம் குறித்து எனக்குத் தெரியாது என்றார்.