கல்லூரிகள் அனைத்தும் மூடல் - விடுதிகளையும் மூட அரசு உத்தரவு
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வலுத்துள்ளதைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுதிகளை விட்டு மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில், அப்பாவி தமிழர்களை காப்பாற்ற கோரியும், போர்நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் பேரணிகள், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அனைத்துக் கல்லூரிகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்.
விடுதிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், உடனடியாக விடுதிகளை காலி செய்ய மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.