தமிழகத்தில் 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் இன்று சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்டது.
போலியோ சொட்டு மருந்து வழங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
கடந்த முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டபோது குழந்தைகள் இறந்தாக புரளி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே அதுபோல புரளி கிளப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
சென்னை, தேனாம்பேட்டை மாநக ராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாமை மேயர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 13 வருடங்களாக கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
21.12.2008 அன்று நடைபெற்ற முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 5,20,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது. சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 5 இலட்சம் குழந்தைகளுக்கு மேல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டு மருந்து மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், அங்கன்வாடி அலுவலர்கள் என 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தன்னார்வு தொண்டு நிறுவ னத்தை சேர்ந்த 5 ஆயிரம் நபர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இன்று காலை 7 மணி முதல் பல்வேறு மையங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளேன். பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு கொண்டனர்.
பொதுமக்கள் எந்தவித வீண் வதந்திகளை நம்பவேண்டாம். போலியோ மருந்தால் எந்த விதமான தீமையும் இல்லை.
சென்றமுறை தீய சக்திகளால் வீண் வதந்திகள் பரப்பபட்டது. எனவே பொதுமக்கள் எந்தவித புரளிகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், சொட்டு மருந்து அவசியம் தரப்பட வேண்டும். இது ஒரு கூடுதல் தவணையாகும். இந்த போலியோ சொட்டு மருந்து உலக தரம் வாய்ந்தது. மேலும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற மிகுந்த தரக்கட்டுப் பாட்டுடன் தயாரிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், சொட்டு மருந்து மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, சர்க்கஸ், புறநகர் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரம் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளது என்றார்.