அமெரிக்காவுக்கு ஒபாமாவின் 819 பில்லியன் டாலர் பேக்கேஜ்!
படுபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்த பல்வேறு சலுகைகளை அறிவிக்கத் தயாராகி வருகிறார் பாரக் ஒபாமா. முதல் கட்டமாக மிகப்பெரிய தொகையை (819 பில்லியன் டாலர்கள்) பல்வேறு துறைகளுக்கும் நிதிச் சலுகையாக அளித்து, முடங்கிக் கிடக்கும் தொழில்களை மீண்டும் இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிதிச் சலுகைக்கு செனடிட்ன் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் உள்ளார் ஒபாமா. ஆனால் செனட்டின் ஒரு பிரிவு (குடியரசுக் கட்சியினர்) இதை எதிர்த்து வருகிறது. எனவே அனைவரது ஆதரவையும் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா.
இதுகுறித்து இன்று அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கப் பொருளாதாரம் திரும்ப அதன் பழைய வலிமையைப் பெற்றுவிடும் என்றே நம்புகிறேன். அதற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பொருளாதார மறுசீரமைப்பு நிதியை வழங்கியாக வேண்டும். அனைவரும் இதைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றே நம்புகிறேன்.
குடியரசுக் கட்சியினர் இதை எதிர்க்கவில்லை. நிதியை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் எச்சரிக்கிறார்கள். அது நல்லதுதான். அவர்களிடமும் நல்ல யோசனைகள் உள்ளன. அவற்றைக் கேட்டு நிச்சயம் அதன்படி இந்த நிதியைப் பிரித்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதலில் இந்த நிதி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டும, என்று கூறியுள்ளார்.