ஐஏஇஏ-வுடன் இன்று பாதுகாப்பு அம்ச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து
வியன்னா: சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியுடன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தில் இன்று இந்தியா கையெழுத்திடுகிறது.
இந்தியாவுக்கான பாதுகாப்பு அம்ச ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியுடன் ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதர் சவுரப் குமார் கையெழுத்திடுகிறார்.
அவருடன் தலைமை கலந்தாய்வாளர் ரவி குரோவர், அணுசக்தித்துறையின், வெளியுறவு விவகார பிரிவு இணை செயலர் கிதேஷ் சர்மா ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்திய அரசு ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் இந்திய-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்துக்கான முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
இந்த ஒப்பந்தம் மூலம் 45 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட நியூக்ளியர் சப்ளையர் குரூப் (என்.எஸ்.ஜி,) என்ற அமைப்பிலிருந்து எரிபொருட்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்களை இந்தியா எளிதில் பெற்று கொள்ள முடியும். இது தற்போது 40 சதவீத திறனுடன் இயங்கி கொண்டிருக்கும் இந்திய அணு உலைகளின் திறனை மேலும் அதிகரிக்க உதவும்.
ஒப்பந்தம் குறித்து சவுரப் குமார் கூறுகையில், இன்று வியன்னாவில் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறோம். இதை கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி 35 உறுப்பினர்களை கொண்ட சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியின் கவர்னர்கள் குழு அங்கீகரித்தது.
அமெரிக்காவுடனான கூடுதல் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கான திட்ட வரைவு தயாரிக்க தாமதமாகி வருகிறது. தயாரித்தவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார்.
இந்தியா பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் அணு சக்தி ஒப்பந்தங்கள் முழு அளவில் நடைமுறைக்கு வர, இன்று மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அணு உலைகளை எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஐஏஇஏவுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.