புலிகள் நடத்திய ஆவேசத் தாக்குதலில் 150 ராணுவத்தினர் பலி
முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகரில் விடுதலைப் புலிகள் நடத்திய முன்கூட்டிய அதிரடித் தாக்குதலில் 150 ராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை பிடிப்பதற்கு ராணுவத்தினர் நேற்று ஆயத்தமாகினர். இதையடுத்து அவர்களைத் தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் கூறுகையில்,
புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பெருமளவிலான ஆயத்தங்களுடன் இருந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி படையினருக்கு பெரும் சேதத்தை விளைவித்தனர்.
இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 2 டாங்கிகள், 2 ராணுவ டிரக்குகள் மற்றும் ராணுவ பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அழிக்கப்பட்டன.
புலிகள் தாக்குதல் நடத்தியபோது வாகனங்களுக்குள் ராணுவ வீரர்கள் அமர்ந்திருந்தனர். இதனால்தான் உயிர்ச்சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது.