நானோ: இந்த ஆண்டு வருவது சந்தேகமே!
டெல்லி: டாடாவின் மக்கள் காரான நானோ இந்த ஆண்டும் ரிலீஸாவது சந்தேகமே என நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2008-ம் ஆண்டு அக்டோபரில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் 1 லட்ச ரூபாய் மக்கள் காரான நானோ, சிங்கூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கார் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் பட்நாகரில் உள்ள தனது தொழிற்சாலையில் நானோ கார் தயாரிக்கும் பணியை டாடா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் நானோ காருக்கென்று இன்னும் தனி தொழிற்சாலை அமைக்கப்படவில்லையாம். நானோவுக்கென்று வழங்கப்பட்ட நிலத்தில் இன்னும் பூர்வாங்கப் பணிகளே துவங்கப்படவில்லை என்கிறார்கள். இதனை டாடாவும் ஒப்புக் கொள்கிறது. அதேநேரம் தங்களின் பிற தொழிற்சாலைகளில் வைத்து நானோவைத் தயாரித்து வெளியில் விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் எப்போது என்பதை மட்டும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் உள்ளது டாடா. உலகில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கடும் சரிவுக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த ஆண்டே நானோவை வெளியில் விடுவது புத்திசாலித்தனமா என டாடா மோட்டார்ஸ் நிர்வாகிகளுடன் ஆராய்ந்து வருகிறாராம் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா.
இந்த ஆண்டு மூன்ராவது காலாண்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.200 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருப்பதால், சற்று பொறுமையாகவே நானோவைக் களமிறக்கும் யோசனை உள்ளதாம்.