கட்டணத்தைக் குறைக்க காலிங் கார்டுகள்!
டெல்லி: இந்தியாவிலிருந்து எங்கும் எந்த மொபைலுக்கும் குறைந்த கட்டணத்தில் பேசும் வசதி கொண்ட தொலைபேசி அழைப்பு அட்டைகளை இந்திய தொலைபேசித் துறை அறிமுகப்படுத்தப் போகிறது.
பிஎஸ்என்எல் மட்டுமின்றி, நாட்டின் பிற தொலைபேசிகளிலும் பயன்படுத்தும் வண்ணம் இந்த காலிங் கார்டுகள் இருக்கும்.
இதனால் அதிக பில் வந்துவிட்டதே என வாடிக்கையாளர் புலம்பத் தேவையில்லை. அவரவருக்கு கட்டுப்படியாகும் அளவுக்கே பேசலாம். அந்த அளவு கட்டணம் கொடுத்து அட்டைகளை வாங்கிக் கொள்ளலாம்.
தொலைபேசித்துறையின் இந்தத் திட்டத்துக்கு தொலைபேசிக் கட்டண ஒழுகங்குமுறை ஆணையமான டிராய் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் சில தனியார் தொலைபேசி நிறுவனங்கள், இப்படிச் செய்வதால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளன. சிலருக்காக இந்த நல்ல திட்டத்தை நிறுத்த முடியாது என்றும், மக்களுக்குப் பலன் தரும் இது போன்ற திட்டங்களை எதிர்க்கக் கூடாது என்றும் ட்ராய் அறிவித்துள்ளது.
இந்த காலிங் கார்டுகள் இருந்தால் தொலைபேசி மட்டுமல்ல, இன்டர்நெட் வசதி கொண்ட கம்ப்யூட்டர் மூலமும் மொபைல் அல்லது லேண்ட் லைனுக்குப் பேச முடியும். இப்போது, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து வேறொரு கம்ப்யூட்டருக்கு மட்டுமே பேசும் வசதியுள்ளது. இந்த கார்டுகளைப் பெற்றுக் கொண்டால் ஒரு இன்டர்நெட் கம்ப்யூட்டரிலிருந்தே எந்த போனுக்கும் பேச முடியும். கட்டணமும் குறையும்.