பள்ளப்பட்டி ரவி உடல் தகனம் - தலைவர்கள் அஞ்சலி
2 நாட்களுக்கு முன்பு பலத்த தீக்காயத்துடன் ரவி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் தீக்குளித்து விட்டதாக மனைவி சித்ராவும், மகன் பிரபாகரனும் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
ரவி இறந்த செய்தியைக் கேட்டதும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் செந்தில்வேல்,மத சார்பற்ற ஜனதா தள தலைவர் ஜோன் மோசஸ், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த ரவியின் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை வக்கீல்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரும் திரண்டு வந்து ரவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ரவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தத்தனேரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு ரவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில், பேசிய நெடுமாறன், முத்துக்குமார் மற்றும் ரவியின் மகத்தான தியாகம் வீண் போகக்கூடாது.
புதன்கிழமை நடைபெறவிருக்கும் பொது வேலை நிறுத்தமும், 7 ஆம் நாள் நடைபெறவிருக்கும் கறுப்புக்கொடி பேரணியும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும்.
முத்துக்குமார் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபா நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டதைப் போல ரவியின் குடும்பத்திற்கும் 3 லட்சம் ரூபா வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், மேடையிலேயே ரவியின் மனைவி சித்ராவிடம் முதல் தவணையாக ஒரு தொகையை வழங்கினார்.
தொடர்ந்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இரங்கல் கூட்டத்தில் பேசிய வைகோ, ரவியின் மனைவி சித்ராவின் மீது இன்று காலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் அறிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது என்றார்.
தொல். திருமாவளவன் பேசிய போது, ரவியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தப்படுத்துகிறார்கள். இந்தி எதிர்ப்பின் போது இறந்தவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்திய வரலாறு உண்டு.
ரவியின் வாக்குமூலம் இன உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. அவரின் உணர்வுகளுக்குச் சான்றுகள் தேவையில்லை.
முதல்வர் கலைஞர் ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்வாரோ, அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
ஈழச் சிக்கலில் பிரபாகரனைப் பிரித்துப் பார்க்க முடியாது. அவரின்றி பேச்சு நடத்தி தீர்வும் காண முடியாது என்றார்.