செல்போன் டவரிலிருந்து குதிக்க முயன்ற மாணவர் கைது
திருநெல்வேலி: இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி செல்போன் டவரிலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய மாணவரை போலீஸார் மீட்டு கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (23). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார்.
நெல்லை வந்த மாணவர் பாலமுருகன், ஸ்ரீ புரத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவன டவரின் மேல் ஏறி நின்று கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
மேலும், கையில் வைத்திருந்த ஜெராக்ஸ் நகலை வீசியவாறு நான் இலங்கை தமிழர்களுக்காக கீழே குதித்து தற்கொலை செய்ய போகிறேன் என்று கத்தினார்.
தகவல் அறிந்ததும், போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் பாலமுருகனிடம் சமரசம் பேசினார்கள். மறுபுறம் தீயணைப்பு வீரர்கள் ஏணிப்படி வழியாக மேலே ஏறி பாலமுருகனை வளைத்துப் பிடித்தனர்.
கீழே கொண்டு வரப்பட்ட பாலமுருகனை கைது செய்த போலீஸார் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.