ராஜஸ்தான் ராயல்ஸின் 12 சதவீத பங்குகளை வாங்கினார் ஷில்பா ஷெட்டி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 12 சதவீத பங்குகளை ரூ.75 கோடிக்கு வாங்கி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்ட இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது.
8 நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. மிகப் பெரிய வியாபாரமாக மாறியுள்ள இந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் ஒவ்வொரு அணியையும் பெரிய தொகைக்கு இந்திய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.
அணிகளின் உரிமையாளர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்களை ஏலம் மூலம் விலைக்கு வாங்கி தங்கள் அணியில் விளையாட வைத்து வருகின்றனர்.
இந்த வகை கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த நடந்த முதல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் வருகிற ஏப்ரல் மே மாதங்கள் நடக்க உள்ள 2-வது ஐ.பி.எல். போட்டியிலும் அந்த அணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பங்குதாரர் ஷில்பா!
இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையைப் பெற்றுள்ள நிறுவனம் எம்ர்ஜிங் மீடியா. ரூ.686 கோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ராஜஸ்தான் அணியை வாங்கி இருந்தது இந்த நிறுவனம். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 12 சதவிகித பங்குகளை பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, தனது காதலரும் லண்டன் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுடன் இணைந்து வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு ரூ.75 கோடியாகும்.
இது பற்றி நிருபர்களிடம் பேசிய அவர், 'ஐபிஎல் கிரிக்கெட்டில் பணத்தைப் போடுவதும் நல்ல முதலீடுதான். நான் எப்போதுமே யார் கீழ்மட்டத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன். ஏனெனில் நானும் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவள் தான்.
முதலாவது ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிக மட்டமாக நினைத்தார்கள், பிக் பிரதர்ஸ் போட்டிக்கு முன் என்னை மதிப்பிட்டதைப் போல! என்றார்.
அவரது காதலர் ராஜ்குந்த்ரா கூறுகையில், 'எனது தந்தை, வெற்றிகரமாக செயல்படும் நிறுவனம் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய சொல்வார். அதன் படி ஐ.பி.எல். போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலீடு செய்துள்ளேன், என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலீடு செய்துள்ள 4-வது பாலிவுட் கலைஞர் ஷில்பா ஷெட்டி ஆவார். ஏற்கெனவே பிரீத்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி), ஷாருக்கான் மற்றும் ஜுகி சாவ்லா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளனர்.