இலங்கைப் பிரச்சினை: வீரமணி தலைமையில் புதிய குழு அமைப்பு
சென்னை: இலங்கைத் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி கி.வீரமணி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் பூரண நலம் பெறுவதற்காக ஒத்த கருத்துக்களுடைய கட்சிகள், அமைப்புகள், சான்றோர்களை உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பை உருவாக்க திமுக செயற்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தப் பேரவைக்கு துணை அமைப்பாக 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் செயல்படுவார்.
செயலாளர்களாக மத்திய அமைச்சர் ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயல்படுவார்கள்.
உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிருஷ்ணன், ராஜன், சிவசுப்ரமணியன், பாஸ்கரன், ஜனார்த்தனன், சாமித்துரை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு, இலங்கைத் தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.