ஊதியம் கோரி சுபிக்ஷா ஊழியர்கள் போராட்டம் !
மதுரை: கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து சுபிக்ஷா ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனம் சுபிக்ஷா. பல்வேறு நகரங்களில் சுபிக்ஷாவின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மலிவு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, மற்றும் பிற இடங்ளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இது குறித்து சுபிக்ஷா-வைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் கூறுகையில், எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் எங்ள் குடும்பங்கள் கடும் நெருக்கடியில் உள்ளது.
எங்களுக்கு உடனே சம்பள பாக்கியை வழங்காவிட்டால் உண்ணாவிரதம், சாலை மறியல் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றனர்.
இது குறித்து சுபிக்ஷா நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை. போராட்டம் நடத்தியவர்கள் எங்களது ஊழியர்கள்தானா என்ற சந்தேகம் உள்ளது. போட்டி நிறுவனங்களின் சதி வேலையாகவும் இது இருக்கலாம் என்றார்.