'தமிழர்களுக்கு துரோகம்'-காங். பிரமுகர் தீக்குளித்து சாவு
சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேவைபார்த்து வந்தார்.
இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார்.
நடுத்தெருவில் வைத்து இலங்கையில் போரை நிறுத்து....தமிழ் வாழ்க.. என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார்.
உடனே ரவிச்சந்திரன் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை தூக்கிச்சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார் ரவிச்சந்திரன்.
மரணமடைந்த ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ்காரர்தான். மகளிர் காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார்.
ரவிச்சந்திரன் உடலுக்கு இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும், பெரும் திரளான தமிழ் உணர்வாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸார் திரண்டனர்:
முன்னதாக ரவிச்சந்திரன் தீக்குளித்த தகவல் பரவியதும், காங்கிரஸ் நிர்வாகிகள், பெரும் திரளான தொண்டர்கள் மயிலாடுதுறை மருத்துவமனை முன்பு திரண்டனர்.
அதேபோல, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும் திரண்டு வந்தனர்.
காங்கிரஸாரைப் பார்த்த அவர்கள், ரவிச்சந்திரனைப் பார்க்கக் கூடாது என்று கூறி தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கி அமைதிப்படுத்தினர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை மூன்றே முக்கால் மணியளவில் ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
இதனால் சீ்ர்காழி, மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
காங்கிரஸால் அவமானம்-மரண வாக்குமூலம்:
முன்னதாக மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் ரவிச்சந்திரன் கொடுத்த மரண வாக்குமூலத்தில்,
அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் (காங்கிரஸ்) முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இந்தியா இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.