பாமக ராஜினாமா செய்யுமா?-பொன்முடி
விழுப்புரம்: ஈழத்தமிழர் பிரச்னைக்காக சட்டசபையில் இருக்கும் 18 பாமக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார்களா என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை ஆலோசனைக் கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கெண்டார். அப்போது அவர் கூறுகையில்,
முதல்வர் கடந்த 2ஆம் தேதி பல்வேறு கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசி 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' என்ற அமைப்பை உருவாக்கினார். உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் இதை அவர் செய்துள்ளார்.
இவ்வமைப்பின் சார்பில் இன்று சென்னையிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்டத் தலைநகரங்களிலும் பேரணி நடைபெறும்.
பாமகவிற்கு தமிழக சட்டசபையில் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இலங்கை தமிழர்களின் பிரச்னையை முன் வைத்து தங்கள் பதவியை அவர்கள் ராஜினாமா செய்யத் தயாரா? தமிழக மக்கள் யார் பக்கம் இருகிறார்கள் என்பது அப்போது தெரியும் என்றார்.