எஸ்.வி.சேகர் தொடங்கும் பிராமணர் கூட்டமைப்பு
சென்னை: அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி. சேகர் தென்னக பிராமணர் சங்க கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை இன்று துவக்குகிறார்.
இந்த அமைப்பு பிராமணர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடத்தவுள்ளது. இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். ஏழை பிராமணர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகமாகிக் கொண்டே உள்ளது.
பிராமணர்கள் வம்பு, மதக் கலவரம், சாதிக் கலவரத்தில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு இலவச கலர் டி.வி. கூட கிடைப்பதில்லை. பிராமண சமூகத்தினரின் கல்வி, வேலை வாய்ப்பு சதவீதம் குறைந்து விட்டது.
ஈமச்சடங்கு செய்யும் ஏழை பிராமணர்கள் உயர் வகுப்பில் பிறந்ததற்காக சமூக நீதி மறுக்கப்பட்டு வாழுகிறார்கள். அவர்களுக்காக போராடவே இந்த இயக்கம் துவக்கப்படுகிறது.
பிராமணர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்துவோம். பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் ஒரு கட்டத்திற்கு மேல் இப்படியொரு சமுதாயம் இருந்த அடையாளமே இல்லாமல் போய்விடும் என்றார்.