ரன்வேயில் விமானம்-ஹெலிகாப்டர் மோதல் தவிர்ப்பு
மும்பை: மும்பையில் இன்று மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானமும், ஹெலிகாப்டர் ஒன்றும் நேருக்கு நேர் மோதவிருந்த நிலையில் விமானியின் சமயோஜித புத்தியால் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
மும்பை விமான நிலையத்தில் இன்று காலை இந்தியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஐசி 866 விமானம் டெல்லிக்கு கிளம்ப தயாராக நின்றது. விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் ரன்-வேயில் ஓட ஆரம்பித்தது.
அப்போது எதிரே அதே ரன்-வேயில் ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்குவதை பார்த்த விமானி விமானத்தை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிலிருந்த 148 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஹெலிகாப்டரில் வந்தவர்கள் ஜனாதிபதி பிரதிபா பட்டீலின் பாதுகாவலர்கள் மூன்று பேர் என்றும், அவர்கள் ஜனாதிபதி பங்கேற்கும் ஒரு விழாவுக்கு பாதுகாப்பளிக்க வந்ததாகவும் தெரிகிறது.
அதிவேகத்தில் கிளம்பிய விமானம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் அதன் டயர் ஒன்றும் கிழிந்து விட்டது. இதையடுத்து விமானம் பாதுகாப்பான பகுதியில் நிறுத்தப்பட்டது.
அதிலிருந்த பயணி ஒருவர் கூறுகையில், விமானத்தின் டயர் ஒன்றும் கிழிந்துவிட்டதாக எங்களிடம் கூறப்பட்டது. மற்றொரு விமானம் மூலம் டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.
ஒரே ரன்-வேயில் ஒரு விமானம் புறப்படுவதற்கும், ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கும் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.