சச்சின், ஆமீருக்கு ரேஷன் கார்டு 'கட்'
மும்பை: புதிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தராததை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோரின் குடும்ப அட்டையை மகாராஷ்டிர மாநில அரசு ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசு கடந்த 2005ல் மாநிலத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்தது. இதன்படி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து தருமாறு கேட்டது.
பல முறை அரசு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட போதும் பலர் இதை நிரப்பி கொடுப்பதில் அதிக சிரத்தை கொள்ளவில்லை.
இதையடுத்து சமீபத்தில் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுப்பதாகவும் அதை பயன்படுத்தி கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கும் மக்களிடம் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
இதனால் மகாராஷ்டிர அரசு 7,000 குடும்ப அட்டைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின், பாலிவுட் நடிகர் அமீர் கான், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் நாராயண் ரானே உள்ளிட்ட பிரபலங்களின் குடும்ப அட்டைகளும் அடங்கும்.