சரத்குமார் கட்சி இன்று சென்னையி்ல் தேர்தல் பணிக்குழு கூட்டம்
சென்னை: நாடளுமன்றத் தேர்தல் பணி குறித்த சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டம் இன்று நடைபெறுவதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் செய்ய வேண்டிய ஆயத்த பணிகளை மேற்கொள்ள கடந்த 4ம் தேதி முதல் மாவட்ட் அணி நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து வருகிறேன்.
இந்த ஆலோசனை கூட்டம் வரும் 11ம் தேதி வரை நடக்கும்.
சமத்துவ மக்கள் கட்சியின் வளர்ச்சி பணியில் தீவிரமாக செயல்படாத சில நிர்வாகிகளை மாற்றி உள்ளோம். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்பநாபனின் பொறுப்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாராமனுக்கும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பை அரியலூர் மாவட்ட செயலர் ஜெ.கே.சிவாவும் கவனிப்பார்கள்.
கட்சியின் நிர்வாக வசதிக்காக நாமக்கல் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக கே.சுரேஷ்காந்தி, மேற்கு மாவட்ட செயலாளராக கே.சின்னதுரையும் செயல்படுவார்கள்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் மாநில அணி செயலாளர்கள் மற்றும் மாநில அணி துணை செயலாளர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக செயல்படுத்தவும், மாவட்டங்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து அளிக்கவும், ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் பணிக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார் சரத்குமார்.