தூத்துக்குடி நோக்கி முத்துக்குமார் அஸ்தி ஊர்வலம்
சென்னை சாஸ்திரிபவன் அலுவலகம் முன்பு முத்துக்குமார் தீக்குளித்து உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முத்துக்குமாரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கொழுவை நல்லூர். அவரது உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொழுவை நல்லூரில் நினைவுத்தூன் அமைக்கப்படுகிறது.
இதையொட்டி முத்துக்குமாரின் அஸ்தி சென்னை கொளத்தூரில் இருந்து கொழுவை நல்லூருக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
நாளை காலை 9 மணிக்கு கொளத்தூரில் அஸ்தி ஊர்வலம் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் தவிர இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், வக்கீல்கள், கல்லூரி மாணவர்கள், மீனவர்கள், வணிகர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.
கொளத்தூரில் இருந்து புறப்பட்டு, ஓட்டேரி, புரசைவாக்கம், அமைந்தகரை, வடபழனி, தி.நகர், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி செல்கிறது.
பின்னர் 12-ந் தேதி கீரனூரில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, திருமயம், சிவகங்கை, மேலூர், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி சென்றடைகிறது.
13-ந் தேதி காலை வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, ராதாபுரம், சாத்தான்குளம், உடன்குடி, பரமன்குறிச்சி, திருச்செந்தூர், ஆறுமுகனேரி, வழியாக ஆத்தூர் சென்றடைகிறது.
13-ந் தேதி கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கடலில் அஸ்தி கரைக்கப்படுகிறது. அன்று மாலையில் கொழுவை நல்லூரில் முத்துக்குமார் நினைவுத்தூன் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
இதில் வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள், வணிகர்கள், மணாவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.