ஆஸ்திரேலிய காட்டுத் தீ பலி 173 ஆக உயர்வு
ஹீல்ஸ்வில்லி : தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தலைநகர் மெல்போர்னுக்கு அருகே ஹீல்ஸ்வில்லி நகர் இருக்கிறது. இங்குள்ள சரணாலயம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்குகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறது.
இங்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. 100 டிகரிக்கு மேல் வெயில் அடிப்பதால் மனிதர்கள் வெளியில் நடமாட முடியவில்லை.
இந்நிலையில் இங்குள்ள காட்டுப் பகுதியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. காற்றும் 100 கி.மீ., வேகத்துக்கு மேல் வீசியதால் காட்டுத் தீ படுவேகமாக பரவியது.
காற்று அடிக்கடி தனது திசையை மாற்றி கொண்டதால், காட்டுத் தீ நாலாப்புறமும் பரவியது. அடுத்து எங்கு செல்லும் என கணித்து செயல்பட முடியாததால் அங்கிருந்த மக்கள் வெளியேற முடியாமல் தீக்கு பலியாயினர். தீயின் உக்கிரம் அதிகமிருந்ததால் தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சிக்கு போதிய பலன் கிடைக்கவில்லை.
இவ்விபத்தில் இதுவரை 173 பேர் பலியாகி உள்ளனர். காட்டுப் பகுதியில் இருந்த பல வகை விலங்குகளும் தீயில் உடல் கருகி இறந்தன.
இதற்கு அங்கு வசித்தவர்களுக்கு காட்டுத் தீ குறித்து சரியான தகவல் கிடைக்காததே முக்கிய காரணம் என தெரிகிறது. அமெரிக்காவில் இருப்பதை போல் எச்சரிக்கை மணிகள் இங்குள்ள வீடுகளில் இல்லை. இதனால் பலரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்கிறார் அதிகாரி ஒருவர்.
காட்டுத் தீயின் உக்கிரம் அதிகரிக்கும் என கருதிய ஆஸ்திரேலியா மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் செல்ல மக்களுக்கு தடை விதித்துள்ளது.
இது குறித்து தேசிய நெருப்பு தடுப்பு ஆணையத்தின் தலைவர் ரசல் ரீஸ் கூறுகையில், அடுத்த முறை இது போன்ற கோர சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்வோம். அதற்கு தேவையான மாற்று முறைகளை விரைவில் கொண்டு வருவோம்.
தற்போது விக்டோரியா மாநிலத்தில் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கும் நடைமுறை எதுவும் இல்லை. எங்களது இணையதளத்தில் மட்டும் தொடர்ந்து காட்டு தீ குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறோம். அவர்கள் என்ன் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வருகிறோம் என்றார் ரசல்.
ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் கூறுகையில், தீ நமக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதன் வேகம், உக்கிரம், அழிக்கும் திறன், தனது திசையை மாற்றும் போக்கு என அனைத்தும் சேர்ந்து பல உயிர்களை பழி வாங்கிவிட்டன. அது கருணை காட்டவில்லை. அது நம்மை திகைக்க செய்துவிட்டது என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.