மருத்துவமனையில் 42 ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம்
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 42 பணியாளர்கள் நேற்று திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவமனை எவ்வளவோ விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலு்ம் கூடுதல் பிரிவுகள் துவக்கப்பட்ட போதிலும் கூடுதல் பணியாளர்கள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
இவர்களுக்கு தொகுப்புதியமாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளை வண்டியில் வைத்து தள்ளி செல்லுதல், துப்பரவு பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் டாக்டர்களுக்கு உதவியாக செயல்படுதல் ஆகிய பணிகளை செய்து வந்தனர்.
இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளமும் வழங்கப்படவில்லை. எனினும் என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பணிக்கு வந்த ஒப்பந்த பணியாளர்கள் 42 பேரை திடீரென நீக்கிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஜினிமணி, துணை தலைவர் ராஜசேகர் மற்றும் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.