18ம் தேதி வரை வக்கீல்கள் போராட்டம்
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வருகிற 18ம் தேதி வரை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் வேண்டியும் கோர்ட்டுகளை புறக்கணிக்க சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் கடந்த 29-ந் தேதி முடிவு எடுத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வரை வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் நேற்று மட்டும் போராட்டத்தை கைவிட்டு, விட்டு வக்கீல்கள் வழக்கப்படி கோர்ட்டில் வந்து ஆஜரானார்கள்.
இருப்பினும், பெரும்பாலான வக்கீல்கள் கோர்ட்டுகளை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று மாலை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் பால். கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரும் 18-ந் தேதி வரை கோர்ட்டுகளை புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழர்கள் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரி மாநில அளவில் 11 ம் தேதி முதல் 17 ம் தேதி முடிய நீதிமன்ற புறக்கணிப்பு தொடர ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இந்த திருத்தத்தை எதிர்த்து 18-ந் தேதி ஒரு நாள் இதற்காக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற போராட்டங்களுக்கு பிறகு 19-ந் தேதி முதல் நீதிமன்ற பணிக்கு திரும்புவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17-ந் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளோடு இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று முற்பகல் 11 மணியளவில் உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் அனைவரும் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.