தீக்குளிப்போருக்கு நிதியுதவி இல்லை-அரசு
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உயிர் துறப்போரின் குடும்பத்தினருக்கு இனி நிதியுதவி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக முதன் முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோர் தீக்குளித்து உயிர் நீத்தனர்.
இவர்களில் ரவி, அமரேசன் ஆகியோர் தற்கொலை குறித்து சர்ச்சை இருந்தது.
முத்துக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில் தீக்குளித்து இறந்த மற்றவர்களுக்கும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பேரணியில் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்னை பாண்டியன் குடும்பத்திற்கோ தமிழக அரசு நிதியுதவி எதையும் அறிவிக்கவில்லை.
அவ்வாறு செய்தால், தற்கொலை செய்வதை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என தமிழக அரசு கருதுவதால், நிவாரண நிதி அறிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.