மயிலாடுதுறையில் டிஎஸ்பி மூக்கு உடைப்பு!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பியின் மூக்கை உடைத்த நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த 7ம் தேதி அன்று தீக்குளித்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பார்ப்பதற்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டும் என்று தனசேகரன் என்பவர் சத்தமிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் அவர் மீது பாய்ந்து அடிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு வந்து டிஎஸ்பி ராமமூர்த்தி சமரசம் செய்ய முயற்சித்தார்.
அந்த தருணத்தில் ஆத்திரத்தில் ஒருவர் டிஎஸ்பி மீது கல் வீசி தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது பற்றி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி ராமமூர்த்தியின் மூக்கை உடைத்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.