தமிழக கடலோரங்களில் கூடுதல் கண்காணிப்பு
தூத்துக்குடி: தமிழக கடலோர பகுதிகளில் கூடுதல் கண்காணிப்ப மேற்கொள்ளப்படும் என தமிழக கடலோர போலீஸ் டிஜிபி மோகன் சேஷாத்திரி தெரிவித்துள்ளார்.
தமிழக கடலோர போலீஸ் டிஜிபி மோகன் சேஷாத்திரி நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தருவைகுளம் கடலோர போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதி மீனவர்கள் சங்க நிர்வாகிகளுடன் கடலோர பாதுகாப்பில் மீனவர்களின் பங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் 12 கடலோர காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் போலீசார் கடலில் ரோந்து செல்வதற்கு வசதியாக கொல்காத்தாவில் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இன்னும் 6 மாதத்தில் படகுகள் கட்டப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு வழங்கப்படும். தற்போது நேவி ஆபரேசன் டாடா என்ற திட்டத்தின் கீழ் தற்காலிமாக மீனவர்களின் படகுகளை ரோந்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
நாகப்பட்டிணம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அதே போன்று கடலோர பாதுகாப்பு போலீசுக்கும் பயன்படுத்தப்படும். கடற்படைக்கு எந்த அடிப்படையில் வாடகைக்கு படகு எடுத்து உள்ளார்களோ அதே அடிப்படையில் படகு வாடகைக்கு எடுக்கப்படவுள்ளது.
புதிய படகுகள் வரும் வரை வாடகை படகுகள் பயன்படுத்தப்படும். ராமேஸ்வரம் பகுதியில் சமீபத்தில் படகுகள் கரை ஒதுங்கியது. காலி படகுகள் காற்றின் திசையில் ஒதுங்குவது புதிதல்ல. கரை ஒதுங்கிய படகில் இதுவரை யாரும் வந்ததாக தகவல் இல்லை. காலி படகு காற்றின் திசையில் அடித்து வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நமது கடல் பகுதியில் 21 சிறிய தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளன. இந்த தீவுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.