ஒரு வருடத்தில் சேது கால்வாயில் கப்பல்-பாலு
மதுரை: சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணியில் இன்னும் 22 கிமீ தூரப் பணிகளே மட்டுமே பாக்கி உள்ளதாக மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
மதுரை திருமங்கலத்தில் இருந்து சாத்தூர் வரை 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.250 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா கப்பலூரில் நடந்தது.
இதில் பாலு பேசுகையில்,
திருமங்கலம், விருதுநகர் மற்றும் சாத்தூருக்கு இடையே ரூ.250 கோடி செலவில் இந்த 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில் 6 சுரங்க பாதைகள், ஒரு ரயில்வே மேம்பாலம், 4 பெரிய பாலங்கள், 15 சிறு பாலங்கள், 73 குறும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை பணிகளுக்கான கட்டுமான பொருட்களுக்கு 33 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கி அதிகாரிகள் 1 ரூபாய்க்கு சாலை அமைத்தால் 7 ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சி அடையும் என கூறியுள்ளனர். அப்படியானால் 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாலை அமைத்தால் பொருளாதார வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 பேருக்கு நிரந்தர வேலை கிடைக்கும். மொத்தம் 17 ஆயிரம் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழின துரோகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ராமர் பாலம் வழியாக செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள்.
ஆனால், உச்சநீதிமன்றம் இந்த திட்டத்துக்கு தடை விதிக்கவில்லை. மாற்று பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு கூறியுள்ளது. இன்னும் 22 கிமீ தூரப் பணிகளே பாக்கி உள்ளன.
6 மாதங்களில் இந்த பணி முடிவடைந்து இன்னும் ஒரு வருடத்தில் சேது சமுத்திரத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கும். இதுவே இந்த கூட்டத்தில் நான் மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழி என்றார் டிஆர் பாலு.