ஆஸ்திரேலியா காட்டு தீ-பின்னணியில் தீவிரவாதிகள்?
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக எரிந்து வரும் இந்தத் தீயில் பல ஆயிரம் கி.மீ. பரப்பளவிலான காட்டுப் பகுதியி்ல் லட்சக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. வனப் பகுதிகளையொட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இதில் இதுவரை 181 பேர் வரை பலியாகிவிட்டனர்.
இந்தத் தீயின் பின்னணியில் சதிச் செயல் இருக்கலாம், இது ஒரு பெரும் கொலை என்று ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் கூறியுள்ளார்.
இந் நிலையில் இந்தத் தீயின் பின்னணியில் தீவிரவாதிகளுக்கும் பங்கிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பத்திரிக்கையான 'த ஏஜ்' கூறியுள்ளது.
அமெரிக்க உளவுப் பிரிவினரை மேற்கோள் காட்டி இந்தப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் Al-Ikhlas Islamic Network அமைப்பு நடத்தும் இணையத் தளத்தில், காடுகளுக்கு தீ வைக்குமாறு இஸ்லாமியர்களை தூண்டிவிடும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்க, ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த அழைப்பு விடு்க்கப்பட்டிருந்தது.
நமது மண்ணை ஆக்கிரமிக்கும் சக்திகளின் வனங்களுக்கு தீ வைப்பது தவறல்ல என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் பெரும் பொருளாதார, சமூக, உயிர் சேதங்களை ஏற்படுத்த முடியும் என்று கூறப்பட்டிருந்ததாக த ஏஜெ கூறியுள்ளது.
ஆஸி போலீஸ் மறுப்பு:
ஆனால், இந்தத் தீயை தீவிரவாதிகள் தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்ற செய்தியை ஆஸ்திரேலிய போலீஸார் மறுத்துள்ளனர்.
இந்த சதியில் சில சமூக விரோதிகளுக்கு பங்கிருக்கலாம் என நம்புகிறோம். இதன் பின்னணியில் தீவிரவாதம் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.