3 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3800 கோடி கூடுதல் நிதி!
டெல்லி: யூகோ வங்கி உள்பட 3 பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க ரூ.3,800 கோடி வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு விளக்கினார். அவர் கூறியதாவது:
யூகோ வங்கி, சென்டில் பேங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி ஆகிய 3 பொதுத்துறை வங்கிகளும், எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வகையில் தங்களது மூலதன இருப்பை அதிகரித்துக் கொள்வதற்காக, அவற்றுக்கு ரூ.3,800 கோடி நிதி உதவி வழங்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதி உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும்.
முதல்கட்டமாக, நடப்பு நிதி ஆண்டில் ரூ.1650 கோடியும், அடுத்த நிதி ஆண்டில் ரூ.2150 கோடியும் வழங்கப்படும்.
வெளிநாட்டு முதலீடு:
இதன்படி, யூகோ வங்கிக்கு 2 கட்டங்களாக ரூ.450 கோடி மற்றும் ரூ.750 கோடியும், சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.700 கோடி மற்றும் ரூ.700 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.500 கோடி மற்றும் ரூ.700 கோடியும் வழங்கப்படும். இதன்மூலம் இந்த வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளும் அதிகரிக்கும்.
உள்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நடத்தும் கம்பெனிகள் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு உச்சவரம்பை கவனிப்பது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ள இந்திய நிறுவனங்களின் உரிமையாளர் மாற்றத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, என்றார் சிதம்பரம்.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் வருமாறு:
சுகாதார துறையில் இந்தியாவும், சுவீடனும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இம்மாத இறுதியில் சுவீடன் நாட்டு செயலாளர் இந்தியா வரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நேதாஜி நகர் மற்றும் மோதி பாக் பகுதிகளில் ரூ.433 கோடியே 67 லட்சம் செலவில் பொது தொகுப்பு குடியிருப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இங்கு 492 வீடுகள் கட்டப்படும்.
மகாராஷ்ட்ராவில் நாக்பூர் விமான நிலையத்தில், சர்வதேச தரத்திலான பயணிகள் மற்றும் சரக்குகள் கூடம் கட்டுவதற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையமும், மராட்டிய அரசும் இணைந்த கூட்டு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
உர உற்பத்தி ஆலைகளை, இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் மாற்றி அமைப்பதற்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.