இந்தியாவில் கால்சென்டரை மூடியது யுனைட்டட் ஏர்லைன்ஸ்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் யுனைட்ட் ஏர்லைன்ஸ் தனது இந்திய கால்சென்டரை மூடிவிட்டது. இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 1000 பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
குறிப்பிட்ட பணிகளில் இருந்த 165 பேரை மட்டும் தனது சிகாகோ கிளைக்கு அழைத்துக் கொண்டுள்ளது இந்நிறுவனம். நிதி நெருக்கடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுள் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனமும் ஒன்று. கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்திலிருந்த 8000 பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்த மாதம் மேலும் 1000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்த இந்நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றியவர்களில் 165 பேரை மட்டும் அமெரிக்காவில் உள்ள தங்கள் சிகாகோ, ஹோனலூலு மற்றும் ஹவாய் அலுவலகங்களில் பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்க, பிரிட்டிஷ் நிறுவனங்கள் இங்குள்ள லோக்கல் கால் சென்டர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்குத் தேவையான பணிகளைச் செய்து கொண்டன. இதனால் கணிசமான செலவு மிச்சமானது. இப்போது இந்தச் செலவைக் கூட சமாளிக்கும் அளவு நிதி நிலை இடம் தராததால், இருக்கிற பணியாளர்களைக் கொண்டே சமாளிக்க முடிவு செய்துள்ளன.