ராகிங் செய்தால் உடனே சஸ்பெண்ட்-உச்ச நீதிமன்றம்
டெல்லி: ராகிங் கொடுமை செய்பவர்களை கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து வெளியேற்ற வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறும் கல்லூரிகள் மீது ராகி்ங்குக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவு பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், விவசாயக் கல்வி நிலையங்கள் உள்பட அனைத்துவகை கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கல்வி நிலையங்களில் ராகிங் கொடுமைகளைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைக்க சிபிஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே. ராகவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை 2007ம் ஆண்டு மே 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் நீதிபதி அரிஜித் பசாயத், நீதிபதி எம்.கே. சர்மா அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அவர்களது தீர்ப்பு விவரம்:
புதிதாகப் படிக்க வரும் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் துன்புறுத்தும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிலையத்திலிருந்தும், விடுதியிலிருந்தும் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட வேண்டும். உடணே அவர்களை கல்வி நிலையம், விடுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும். இந்த நடவடிக்கையை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனமே எடுக்க வேண்டும். ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது ஒவ்வொரு கல்வி நிலையத்தின் கடமை.
ராகிங் செய்வது மனித உரிமை மீறல் என்பதையும், கொடுமை என்பதையும் சட்டவிரோதமான அச் செயலைச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய நிறுவனத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கும் விளக்கக் கையேட்டில் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
ராகிங் செய்யப்பட்டது தெரியவந்தால் முதல் கட்ட விசாரணை நடத்தி, அப்படி ராகிங் செய்தவர்களை கல்வி நிலையத்திலிருந்து உடனடியாக இடை நீக்கம் செய்ய வேண்டும். உடனே அந்த மாணவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும்.
ராகிங்கை ஒழிப்பதில் அனைத்து மாநில அரசுகளும் முழு அக்கறை காட்ட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். எவருக்கும் விதிவிலக்கு இல்லை.
ராகிங் குறித்து தகவல்கள் தெரிந்த பிறகும் முறையாக விசாரிக்காமலோ, அல்லது மேல் நடவடிக்கை எடுக்காமலோ அலட்சியம் காட்டும் கல்வி நிறுவனங்கள் மீது ராகிங் கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தங்களுடைய வளாகத்தில் ராகிங் கொடுமைகள் நடக்காமல் இருக்க ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை மார்ச் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.