மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
இராமநாதபுரம்: இராமேஸ்வரம் அருகே நாட்டுப் படகு மீனவர்கள் 15 பேர் மீது நடுக் கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை மூன்று படகுகளில் இராமேஸ்வரம் அருகே பாம்பனைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் 15 பேர் மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களை ஐஸ் கட்டியில் உட்கார வைத்து சித்ரவதை செய்ததாகவும் தெரிகிறது.
பின்னர் செல்போன், டீசல் போன்றவற்றை பறிமுதல் செய்து கொண்டு அனுப்பியுள்ளனர். இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படும் 15 மீனவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடுக்கடலில் மீனவர்கள் மோதல்:
இதற்கிடையே திருச்செந்தூர் அருகே மீன் பிடிப்பதில் இரு பகுதி மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்செந்தூரை அடுத்துள்ளது புன்னகாயல். இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிந்த கடல் பகுதியில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிகிறது.
இதையடுத்து இரு தரப்பு மீனவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் புன்னகாயல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் 4 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.