முல்லை: புதிய நிபுணர் குழு-ராமதாஸ் எதிர்ப்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் புதிய நிபுணர் குழுவை அமைக்கலாமா என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வுக்குப் பின்னர், படிப்படியாக 152 அடி வரையில் நீரைத் தேக்கி வைத்து கொள்ளலாம் என்றும் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்பால் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் அனுமதி வழங்கியது.
நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்ற கேரள அரசின் வாதங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பல்வேறு நிபுணர் குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையிலும், மத்திய அரசி்ன் நீர்வளத்துறையும் தந்த அறிக்கைகளை ஏற்றுக் கொண்டதின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனுமதி வழங்கியது.
ஆனால், அதை ஏற்று செயல்படுத்த வேண்டிய கேரள அரசு தனது சட்டமன்றத்தில் புதிதாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் நிலையை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் மீண்டும் ஒரு நிபுணர் குழுவை அமைப்பது என்ற யோசனை கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிடும். உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள வழக்கின் அடிப்படை தன்மையையே அது மாற்றிவிடும்.
எனவே, தமிழகத்திற்கு பாதகமான இந்த யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக அரசு தனது கருத்தை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் இப்போது பரிசீலனையில் உள்ள வழக்கை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.