பெரியாறு அணையில் கேரள குழு 'ஆய்வு'-திருப்பி அனுப்பி தமிழக அதிகாரிகள்
அணையின் சில குறிப்பிட்ட பகுதிக்கு குழுவினர் செல்ல தமிழக அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு கூடியது.
முல்லைப் பெரியாறு அணை கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த அணை தமிழக பொதுப் பணித் துறையின் முழு கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இந்த அணை பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினமும் நேற்றும் விசாரணை நடைபெற்றது. இந் நிலையில், நேற்று காலை 10 மணிக்கு கேரள சட்டப் பேரவை உறுப்பினர்கள் 4 பேர் ராஜாஜி மாத்யு தாமஸ் (ஒல்லூர் தொகுதி) தலைமையில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதாகக் கூறிக் கொண்டு செய்ய அணைக்கு வந்தனர்.
அணைப் பகுதியில் ஆய்வு செய்த இந்த எம்எல்ஏக்கள் நீர்மட்டத்தை அளவிடும் அளவுகோல் 141 அடியில் இருந்ததைப் பார்த்ததும் டென்சனாயினர். நீர் மட்டம் 136 அடிக்கு மேல் போனால் அணை உடைந்துவிடும் என கேரளம் கதை விட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அளவுகோல் 141 என்று காட்டுவது தவறு என்றும், அணையில் நீர் மட்டம் 110 அடிதான் உள்ளது என்றும் புதிய கணக்கு கூறினர். இதைக் கேட்டு தமிழக அதிகாரிகள் சிரிக்கவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அணையின் அடிப் பகுதியிலுள்ள 10 அடி கேலரிக்கும், 45 அடி கேலரிக்கும் கேரளக் குழுவினர் செல்ல முயன்றனர். ஆனால், கேலரிக்குள் தொழில்நுட்பக் குழுவினரையும், பொறியாளர்களையும் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனால் கேரள குழுவினர் மீண்டும் தமிழக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக தரப்பினரும் விடாமல் வாக்குவாதம் செய்ததோடு அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து திரும்பி வந்த ராஜாஜி மாத்யு தாமஸ், கேலரிக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால் பொறியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான உத்தரவைக் காட்டுங்கள் என்று கேட்டால், வாய்மொழி உத்தரவு என்று கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் நிலையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் அங்கு வந்து சென்றுள்ளனர்.