காதலர்கள் பாதுகாப்பாக உலா வர வாட்டாள் விடும் வாகனம்
பெங்களூர்: காதலர் தினத்தன்று பெங்களூர் நகரில் காதல் ஜோடிகள் பாதுகாப்பாக வலம் வருவதற்காக கன்னட சலுவாளி கட்சியைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் சிறப்பு வாகனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
நாளை உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வெகு பிரபலமான காதலர் தினம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளது.
ஆனால் சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் காதலர் தினத்தை எதிர்த்து வருகின்றன.
இதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சேனா. சமீபத்தில மங்களூர் பப்பில் புகுந்து பெண்களை கண்மூடித்தனமாக தாக்கி பாப்புலர் ஆனது இந்த அமைப்பு.
இந்த நிலையில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களை போலீஸில் பிடித்துக் கொடுப்போம் அல்லது பெற்றோரிடம் ஒப்படைப்போம் என அது கூறியுள்ளது.
இதனால் கர்நாடகத்தில் டென்ஷன் நிலவுகிறது. இந்த நிலையில் கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், காதலர்களுக்கு சூப்பர் உதவி ஒன்றை அறிவித்துள்ளார்.
அதாவது காதலர்கள், காதலர் தினத்தன்று பாதுகாப்பாக பெங்களூரில் நகரில் உலா வருவதற்காக வாகனம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காதலின் அருமை குறித்தோ, மாங்கல்யத்தின் பெருமை குறித்தோ ஸ்ரீராமசேனா தலைவருக்கு எதுவும் தெரியாது. இதனால்தான் காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்துவைப்போம் என்று கூறி மிரட்டி வருகிறார்.
காதலர் தின கொண்டாட்டத்தால் வெளிநாட்டு கலாசாரம் பரவுகிறது என குதிக்கும் அமைப்புகள் பப்களுக்கும், பார்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டபோது மவுனமாக இருந்தது ஏன்?
மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் எந்த விழாவையும் கொண்டாட ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு.
காதலர்கள் பாதுகாப்பாக காதலர் தினம் கொண்டாட வசதியாக எங்கள் அமைப்பின் சார்பில் -காதல் வாகனம்- இயக்கப்படுகிறது. அதில் ஏறிக்கொண்டு காதலர்கள் 14-ம் தேதி முழுவதும் பெங்களூரில் வலம் வரலாம் என்றார் வாட்டாள்.