6000 பீரங்கிக் குண்டுகள் வீசி இலங்கை தாக்குதல்-132 தமிழர்கள் பலி
வன்னி: வன்னிப் பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6000 பீரங்கிக் குண்டுகளை வீசி இலங்கை ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இவை அனைத்தும் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் இருந்த மக்கள் மீது வீசப்பட்டன. இதில் 132 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
வன்னியில் உள்ள தேவிபுரம் மக்கள் காப்பு வளையப் பகுதியில்,நேற்று வியாழக்கிழமை அதிகாலை முதல் எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர்.
நேற்று மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 358 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 91 பேரும் மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 10 பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.