உயர்நீதிமன்றம் எதிரே காங். கொடிகளை எரித்த வக்கீல்கள்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் கட்சியின் கொடிகளை எரித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் வருகிற 18ம் தேதி வரை தங்களது இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களை தொடருவதென நேற்று முடிவு செய்தனர்.
அதன்படி நீதிமன்றப் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி என அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகங்களை சுற்றி வந்து இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், உயர்நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வக்கீல்களில் ஒரு பிரிவினர் உயர்நீதிமன்ற முன்வாசலில் கூடி, அங்கு காங்கிரஸ் கட்சிக் கொடியையும், சோனியா காந்தி படத்தையும் எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ அலுவலகம் முன்பு முற்றுகை
இதற்கிடையே உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் பால்கனகராஜ், பா.ம.க வக்கீல்கள் பிரிவு தலைவர் பாலு, பெண் வக்கீல்கள் சங்க துணை தலைவர் பிரசன்னா, வக்கீல்கள் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் காமராஜ், கோபால், ஜானகி ஆகியோரின் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மன்றோ சிலை வந்தனர்.
அங்குள்ள தென்பிராந்திய ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் வக்கீல்கள் அனைவரையும் கைது செய்து கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து சில பெண் வக்கீல்கள் போலீசார் தடுப்பையும் மீறி ராணுவ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களையும் பெண் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். வக்கீல்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து சென்ற பிறகு வக்கீல் மாரி என்பவர் தலைமையில் 5 வக்கீல்கள் கோஷங்களை எழுப்பியபடி ராணுவ அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசார் அவர்களையும் மடக்கி கைது செய்தனர்.
ராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அந்த சாலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட வக்கீல்கள் அனைவரும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட வக்கீல்களை இலங்கை தமிழ் மாகாண எம்.பி. சிவாஜிலிங்கம் சந்தித்து பேசினார். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.