ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, மாடுகளும் வதைக்கப்படுகின்றன. எனவே இந்த விளையாட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிராணிகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 30-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 13-ந் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் நெடுமாறன், ஜல்லிக்கட்டு தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களில் ஒருசிலர் முழுமையான அறிக்கை அளிக்கவில்லை. அவை கிடைத்தவுடன் பதில் மனுதாக்கல் செய்யப்படும்.
எனவே இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்று கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிப்பது நீதிமன்றத்தின் நோக்கம் இல்லை. மிருகவதை மற்றும் மனித உயிர்கள் பலியாவதும், காயம் அடைவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி தமிழக அரசும், விலங்குகள் நல வாரியமும் ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
எனவே மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று கூறி வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.