மும்பை தாக்குதலை தீவிரவாதிகள் திட்டமிட்ட வீடு கண்டுபிடிப்பு
கராச்சி: பாகிஸ்தானில், மும்பைத் தாக்குதலை தீவிரவாதிகள் உட்கார்ந்து பேசி திட்டமிட்ட வீட்டை கண்டுபிடித்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் ஜியோ டிவி கூறியுள்ளது.
கராச்சி அருகே உள்ள யூசுப் கெளத் என்ற தெருவில் அந்த வீடு இருப்பதாகவும், அங்குதான் தீவிரவாதிகள் கூடி மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும் ஜியோ டிவி கூறுகிறது.
அந்த வீட்டில், மீன் பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன. லாக்கர்களும், பீரோக்களும் கூட அந்த வீட்டில் உள்ளன. மேலும் வீட்டின் சுவற்றில் ஒரு மேப் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மும்பைக்கான கடல் மார்க்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப்பின் வீட்டையும் பாகிஸ்தான் மீடியாக்கள்தான் கண்டுபிடித்து வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால் கஸாப் பாகிஸ்தானியே அல்ல என்று முதலில் பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. சில நாட்களுக்கு முன்புதான் கஸாப் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து பாகிஸ்தானிதான் கஸாப் என்பதை ஒத்துக் கொண்டது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் கூடி சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் வீடு குறித்த தகவலை பாகிஸ்தான் டிவி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.