விசாரணைக்காக கஸாபை ஒப்படையுங்கள் - பாக்.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கஸாப் கைது செய்யப்பட்டான். அவனது வாக்குமூலத்தில் இருந்து மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என்பது உறுதியானது.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்தது. இந்தியா தேடி வரும் குற்றவாளிகளை பாகிஸ்தான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கேட்டது.
இந்நிலையில் தங்களுக்கு மும்பை தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி வந்த பாகிஸ்தான் சமீபத்தில் சதி திட்டம் தங்கள் நாட்டில் தான் தீட்டப்பட்டது என்பதை முதன் முறையாக ஒப்புக்கொண்டது.
இதையடுத்து இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமது அஜ்மல் கஸாப் உட்பட 9 பேர் மீது பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறுகையில்,
கஸாப் பெயரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் கருதினால், அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.
ஆனால், தற்போது இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கஸாபை அழைத்து வருமாறு பாகிஸ்தான் கோர்ட்டு பரிந்துரைத்தால் அதை ஏற்றுக் கொண்டு கண்டிப்பாக அவரை அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என்றார் மாலிக்.