நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை... காரணம் தொலைநோக்கில் பற்றாக்குறை!!
குறிப்பாக தேர்தலின் போது விடுமுறையை ஜாலியாக டிவி பார்த்துப் பொழுதைக் கொல்லும் நடுத்தர வர்க்கத்தினர் அப்படியொரு பட்ஜெட்டையே எதிர்பார்த்தனர். அதிலும் குறிப்பாக வருமான வரிக்கான உச்சவரம்பு வருவாய், சேமிப்புகள் மீதான வரிவிலக்கு என பலவற்றை எதிர்பார்த்தனர்.
ஆனால் முகர்ஜியிடம் அப்படியொரு திட்டமே இல்லை என்பது அவர் முதல் இரு பாராவைப் படித்தபோதே தெரிந்துவிட்டது.
வெறும் அரசின் புகழைப் பாடும் ஆதிகாலத்து மந்திரி மாதிரி, மன்மோகன் சிங் அரசின் சாதனைகளைப் பட்டியல் போட்டவர், மொத்த செலவினத்தில் ராணுவத்துக்கு மட்டுமே 34 சதவிகிதத்தை ஒதுக்கியிருக்கும் சாதனையை விளக்கினார்.
பின்னர் அவர் வாசித்ததெல்லாம் வெறும் வரவு செலவு கணக்குகள்தான். புதிய பல்கலைக் கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைப்பது பற்றியெல்லாம் அவர் சொன்னாலும், அவை இடைக்கால பட்ஜெட்டுக்கானவை அல்ல. பணவீக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தி 4.4 சதவிகிதத்துக்கு கொண்டு வந்துவிட்டதாக பெருமையுடன் தெரிவித்தார். ஆனால் எந்தப் பொருளுக்கும் விலை குறையாதது ஏன் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்.
ஆனால் வேறு ஒரு 'நல்ல செய்தி'யைச் சொன்னார். மேற்கத்திய நாடுகளை முன்பு கடுமையாக வாட்டிய பொருளாதாரப் பெருமந்தம் இந்தியாவையும் இப்போது பீடித்துவிட்டதாகவும், அதனால் 2009ல் பெரும் சோதனைகள் காத்திருப்பதாகவும் கூறினார்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, நாட்டின் வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை இரண்டுமே எக்கச்சக்கமாய் கூடிவிட்டதுதான்.
அது என்ன வருவாய்ப் பற்றாக்குறை (revenue Deficit)?:
ஒரு நாட்டுக்கு இன்னின்ன வருவாய் வரும் என எதிர்பார்த்து ஒரு செலவுத் திட்டம் வகுத்து வைப்போம். ஆனால் எதிர்பார்த்ததை குறைவாக வருவாய் வரும்போது, அதனால் ஏற்படும் பற்றாக்குறையை வருவாய்ப் பற்றாக்குறை என்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள வருவாய்ப் பற்றாக்குறை 4.4 சதிகிதம். அடுத்த ஆண்டு இது 4 சதவிதிமாகக் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார் முகர்ஜி.
நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit)?:
நாட்டின் அனைத்து வளங்கள் மூலம் (கடன் நீங்கலாக) திரட்டப்படும் நிதி ஆதாரத்துக்கும், மொத்த செலவுக்கும் இடைப்பட்ட பற்றாக்குறைதான் இது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த நிதிப் பற்றாக்குறையின் அளவு 6 சதவிகிதமாகும். ரிசர்வ் வங்கி, இதர வணிக வங்கிகளிடமிருந்து பணத்தை திரட்டி இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க உள்ளது மத்திய அரசு.
இந்த முறை வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம், அரசு அறிவித்த பல்வேறு நிதிச் சலுகைகளே என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளார் பிரணாப் முகர்ஜி. இடைக்கால பட்ஜெட் என்பது, அடுத்து வரும் சில மாதங்களைச் சமாளிக்க, கையாளப்படும் பணத்துக்கு ஒப்புதல் கேட்கும் சம்பிரதாயமே. இந்த முறை பிரணாப் முகர்ஜியும் அப்படியொரு சம்பிரதாயத்தையே நடத்தி முடித்திருக்கிறார்.
கிராமப்புற விவசாயிகளே ஹீரோக்கள் என அவர் தன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தாலும், அந்த ஹீரோக்கள் நீண்டகால அளவில் பலன்பெறும் அளவுக்கு பெரிதாக ஒன்று அறிவித்துவிடவில்லை. 'ஹீரோக்களுக்கு' பென்ஷன் வழங்குவது போன்ற சில தற்காலிக திட்டங்களே அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவை கடன் தள்ளுபடி, சில வகை புதுக் கடன்களை வழங்கத்தான் உதவும்.