கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழக என்ஜீனியர் பலி
சென்னை: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜீனியர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா நகரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் இரவு ஒரிசாவின் ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் 15 பேர் பலியாயினர். 100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில், சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் செந்தில்குமார் (24) என்பவரும் பயணம் செய்துள்ளார்.
இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பெருகவாழ்ந்தான் கிராமம் ஆகும். வேலை விஷயமாக கடந்த 15 நாட்களுக்கு முன்னர் செந்தில்குமார் கொல்கத்தா சென்றார். வேலையை முடித்துக்கொண்டு சம்பவ தினத்தன்று சென்னை புறப்பட்டார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளான ஒரு மணி நேரத்தில், செந்தில்குமாரின் செல்போனில், அவரது தங்கைக்கு ஒருவர் போன் செய்து, செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதன் பின்னர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை.
நேற்று மதியம் செந்தில்குமாரின் மாமா பரஞ்சோதி புவனேஸ்வரம் சென்று, அங்கு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத உடல்களை சென்று பார்த்தார். அதில், செந்தில்குமாரின் உடல் இருப்பதை உறுதிசெய்து போலீசில் தெரிவித்தார். மேலும், சொந்த ஊருக்கும் தகவல் கொடுத்தார்.
இதனால், பெருகவாழ்ந்தான் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. செந்தில்குமாரின் உடலை சென்னை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் தப்பியவர்கள் சென்னை வருகை
இதற்கிடையே, கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்து காயத்துடனும், காயமின்றியும் உயிர் தப்பியவர்கள், மாற்று ரயில் மூலம் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி வரவேற்றனர்.
ரயிலில் புதிதாக 23 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டது. அதில் 700 பயணிகள் இருந்தனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் ஏசி பெட்டிகள் ஒதுக்கப்பட்டது. அவர்கள் 8 ஏசி பெட்டிகளில் சென்னை வந்தனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக காலை 7.15 மணிக்கு வந்தது. இவர்களை வரவேற்பதற்காக உறவினர்கள் நேற்றிரவு முதலே ரயில் நிலையத்தில் குவிந்திருந்ததால் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அவர்களுக்கு உதவும் வகையில் தற்காலிக உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
கட்டுடன் ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகளை பார்த்து உறவினர்களின் கண்களில் நீர் கசிந்தது. அவர்களை கட்டியணைத்து வரவேற்றனர். பயணிகள் அனைவருக்கும் ரயில்வே சார்பில் தேனீர், பிஸ்கட், வாட்டர் பாட்டில் அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் இருக்கும் இடங்களுக்கு 15 மாநகர பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.