இலங்கை மாகாண தேர்தல்-ஆளும் கூட்டணி வெற்றி
கொழும்பு: இலங்கையின் மத்திய மற்றும் வட மேற்கு மாகாண கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறவில்லை.
மத்திய மாகாணத்தில் ராஜபக்சே கூட்டணிக்கு 59 சதவீத வாக்குகளும், வடமேற்கு மாகாண தேர்தலில் 55 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.
இத்தேர்தலில் ஆளுங்கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லீம் வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. மாறாக, ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் முஸ்லீம்களின் ஆதரவை ஆளுங்கூட்டணி சுத்தமாக இழந்திருப்பது வெளிச்சமாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட எட்டு முஸ்லீம் வேட்பாளர்கள் கண்டி மற்றும் குருனெகலா மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல கண்டியிலிருந்து ஒரு தமிழர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் மாத்தளா, கண்டி, குருனெகலா ஆகிய மாவட்டங்களில் ஆளுங்கூட்டணியின் ஒரு தமிழ் வேட்பாளரும் வெற்றி பெற முடியவில்லை.
மத்திய மாகாணத்தில் 11 தமிழ் வேட்பாளர்களை ஆளுங்கூட்டணி நிறுத்தியது. ஆனால் இவர்களில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைவரும் சிலோன் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருப்பினும் இவர்கள் ராஜபக்சேவின் கட்சிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.
நுவரேலியா மாவட்டத்தில் ஆளுங்கூட்டணிக்கும், எதிர்க்கட்சிக்கும் ஒரு முஸ்லீம் கூட வெற்றியைத் தேடித் தர முடியவில்லை. இங்கு தமிழர்களே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர்.