தையலை பிரிக்கும் முன் பைலை பிரித்த முதல்வர்
சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதி முதுகு தண்டுவடத்தில் செய்யப்பட்டுள்ள ஆபரேஷன் தையல்கள் பிரிக்கப்படும் முன்னதாகவே டாக்டர்களின் ஆலோசனையை மறுத்து முக்கிய பைல்களை பார்த்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் முதுகுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலி தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து அவருக்கு கடந்த 11ம் தேதி முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறி டி-7 என்ற சிறப்பு அறையில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு ஆபரேஷன் செய்த டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் ஜெய்ஸ்வால் வரும் 21ம் தேதி சென்னை வருகிறார்.
அப்போது அவர் முதல்வரின் உடல்நலன் குறித்து மற்ற டாக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார். இதையடுத்து முதல்வரின் தையல் வரும் 24 அல்லது 25ம் தேதி பிரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தையல் பிரிக்கும் வரை எந்த பணியும் செய்யக்கூடாது என டாக்டர்கள் கண்டிப்புடன் கூறிவிட்டனர். அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் முதல்வர் வழக்கமான சுறுசுறுப்போடு தன்னுடைய பணிகளை செய்து வருகிறார்.
நேற்று காலை முதல் பிற்பகல் வரை பட்ஜெட் உரையை ஆராய்ந்து அதில் சில திருத்தங்கள் செய்தார். முக்கிய பைல்களையும் மருத்துவமனைக்கு கொண்டு வர செய்து மக்கள பணிகள் பாதி்க்காமல் பார்த்து கொண்டார். இதற்காக அவரது படுக்கைகள் சாய்வான நிலையில் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உதவும் வகையில் சில மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.