For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

28%-28%: சம பலத்தில் திமுக-அதிமுக: கருத்துக் கணிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalaitha and Karunanidhi
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுகவும் அதிமுகவும் தலா 28 சதவீத மக்களின் ஆதரவோடு சம நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்துள்ளதும் தெரிய வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து நாடு முழுவதும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் இரண்டாம் பகுதி நேற்று வெளியானது.

இதன்படி தமிழகத்தில் திமுக-அதிமுக இடையே சரி சமமான போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன் திமுக 26 சதவீத வாக்குளையும், அதிமுக 16 சதவீத வாக்குகளையும் பிற கட்சிகள் 48 சதவீத வாக்குகளையும் பெற்றன.

இப்போது திமுகவின் பலம் 28 சதவீதமாகவும், அதிமுகவின் பலமும் 28 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. அதாவது ஆளும் திமுகவுக்கு 2 சதவீத அதிக வாக்குகள் கிடைக்கலாம். ஆனால், வெறும் 16 சதவீத ஆதரவே பெற்ற அதிமுகவுக்கு இப்போது 28 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு வேகமாக அதிகரித்து வருவது புலனாகிறது.

அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 48 சதவீத வாக்குகளைப் பெற்ற பிற கட்சிகளின் ஆதரவு 44 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனாலும் இது தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவை விட மிக மிக அதிகம். இதன்மூலம் கூட்டணிக் கட்சிகள் தான் திமுக அல்லது அதிமுகவின் வெற்றியை நிர்ணயிக்க உள்ளதும் தெளிவாகிறது.

இந்த பிற கட்சிகளில் காங்கிரஸ், பாமக, தேமுதிக, இடதுசாரிகள், மதிமுக, பாஜக ஆகியவை அடங்கும்.

இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு 13 சதவீத மக்களி்ன் ஆதரவும், விஜய்காந்தி்ன் தேமுதிகவுக்கு 9 சதவீதமும், பாஜகவுக்கு 6 சதவீதமும், பாமகவுக்கு 4 சதவீதமும், இடதுசாரிகளுக்கு 3 சதவீதமும், மதிமுகவுக்கு 1 சதவீதமும், மற்றவர்களுக்கு 8 சதவீத மக்களின் ஆதரவும் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போது பாமக, மதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் வாங்கும் என்றும் தெரிகிறது.

இந்த வாக்கு சதவீதத்தை வைத்துப் பார்க்கையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக தொடர்ந்தால் அந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

(அதே நேரத்தில் பாமகவை இழுப்பதோடு, பாஜக வாக்குகளையும் அதிமுக கவர்ந்தால் (அதற்கான ஏற்பாட்டை பாஜகவே கூட செய்து தர வாய்ப்புண்டு. மேலும் சில பாஜக-அதிமுக ஆதரவு பத்திரிக்கையாளர்கள் கூட ஜெயலலிதாவுக்கு உதவலாம்.. அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பாஜக தரப்பில் மறைமுக பிரச்சாரம் நடக்கலாம்) நிலைமை மாறலாம்)

அதிமுகவைப் பொறுத்தவரை உயர் ஜாதியினர் மத்தியில் 35 சதவீதமும், நாடார் சமூகத்தினர் மத்தியில் 17 சதவீதமும், வன்னியர்கள் மத்தியில் 33 சதவீதமும், பெண்கள் மத்தியில் 13 சதவீதமும், முஸ்லீம்கள் மத்தியில் 10 சதவீதமும் ஆதரவு உள்ளதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் திமுக ஆட்சி குறித்து திருப்தி தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது. திமுக ஆட்சியால் மிகவும் திருப்தியடைந்துள்ளதாகக் கூறுவோர் 20 சதவீதம் பேர் (2007ல் இது 28 சதவீதமாக இருந்தது). திருப்தியடைவதாகக் கூறுவோர் 42 சதவீதம் பேர் (2007ல் இது 39 சதவீதமாக இருந்தது).

ஆட்சி மீது அதிருப்தியாக உள்ளதாகக் கூறுவோர் 30 சதவீதம் பேர் (2007ல் இது 22 சதவீதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.). 8 சதவிகிதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

எனினும் காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்திருக்கிறது என்பது முந்தைய தேர்தல்களின் வரலாறாக உள்ளது. தற்போது அதில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அந்த கணிப்பு தெரிவிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X